ஆஹா டிஜிட்டலில் மூன்று மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த ‘ஐங்கரன்’.

 ஆஹா டிஜிட்டலில் மூன்று மில்லியன் பார்வையாளர்கள் ரசித்த ‘ஐங்கரன்’.

ஆஹா 100% தமிழ் ஒ.டி.டி-யில் வெளியான ஐங்கரனின் டிஜிட்டல் பிரீமியர் கொண்டாட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த இளம் திறமையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். பல எதிர்பார்ப்புகளுடன் ஜூன் 10-ஆம் தேதி ஆஹா 100% தமிழ் ஒ.டி.டி தளத்தில் வெளியான ‘ஐங்கரன்’, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இளம் விஞ்ஞானியை மையப்படுத்தி உருவாகி வெற்றி பெற்ற ‘ஐங்கரன்’ திரைப்படம், கடந்த வாரம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த படத்தின் கதையை போன்று தமிழகத்தில் ஏராளமான இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவது தொடர்பாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து, நேரில் வரவழைத்து, ஐங்கரன் படத்தை டிஜிட்டல் தளத்தில் வெளியிட்ட ஆஹா டிஜிட்டல் குழுமம் பாராட்டி, பரிசளித்து கௌரவித்தது.

‘ஈட்டி’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஐங்கரன்’. ‘இசை அசுரன்’ ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை, திரைக்கதை புதுமையாகவும், சுவராசியமாகவும் இருந்ததால், ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் கடந்த வாரம் ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள இளம் விஞ்ஞானிகளை கண்டறிந்து பாராட்ட ஆஹா டிஜிட்டல் தள குழுமம் தீர்மானித்தது. இவர்களுக்கான பாராட்டு விழா சென்னையில் உள்ள ரமடா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் மறைந்த முன்னாள் இந்திய குடியரசு தலைவரும், உலகளாவிய இளைஞர்களின் கனவு நாயகனான அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் ஆஹா டிஜிட்டல் தளத்தின் வணிக பிரிவு தலைவரான சிதம்பரம் நடேசன் மற்றும் ‘ஐங்கரன்’ படக் குழுவை சார்ந்த நாயகன் ஜி.விபிரகாஷ் குமார், இயக்குநர் ரவி அரசு, தயாரிப்பாளர் கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ரமடா நட்சத்திர ஹோட்டல் நிறுவனம் ஹாஸ்பிடாலிடி பார்ட்னராக செயல்பட்டனர்.

இவ்விழாவில் ஆஹா டிஜிட்டல் தளத்தின் வணிகப் பிரிவு தலைவரான சிதம்பரம் நடேசன் பேசுகையில், ” உள்ளூர் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதில் ஆஹா பெருமைகொள்கிறது. யூடியூப் தளத்திலிருந்து கண்டறியப்பட்ட டெம்பிள் மங்கீஸ் குழு இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும், இவர்களின் குத்துக்கு பத்து வலை தொடர் இப்போது ஆஹா தமிழ் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ஆஹா ஒ.டி.டி தளம் தனது பார்வையாளர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதிய படங்களையும், சீரிஸ்களையும் 1/-ரூபாய்க்கு வழங்கி வருகிறது. சமீப காலத்தில் மன்மதலீலை, போத்தனூர் தபால் நிலையம், கூகுள் குட்டப்பா போன்ற சிறந்த தனித்துவமான படங்களை ஆஹா வெளியிட்டுள்ளது. அம்முச்சி சீசன் 1, யூடியூப் தளத்தில் வெளியாகி அநேக மக்களின் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இப்போது “அம்முச்சி 2” வரும் ஜூன் 17, ஆஹா தமிழ் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.“ என்றார்.

நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசுகையில், ” இங்கே குழுமியிருக்கும் ஏராளமான இளம் விஞ்ஞானிகளை காணும்பொழுது உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறேன். சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கடினமாக உழைத்து, தங்களது கண்டுபிடிப்புகளை கண்டறிந்திருக்கிறார்கள். இதுபோன்ற இளம் விஞ்ஞானிகளின் கதாபாத்திரத்தில் நான் நடித்ததை பெருமிதமாக கருதுகிறேன். என்னுடைய திரையுலக பயணத்தில் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், ‘ஐங்கரன்’ படத்தில் இளம் விஞ்ஞானியாக நடித்தது மறக்க இயலாது. இந்தப்படத்தில் இளம் விஞ்ஞானி ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இயக்குநர் ரவி அரசு திரைக்கதை எழுதி இருந்தார். அதில் திரைப்படத்திற்கான வணிக ரீதியிலான சில விசயங்களை இணைத்திருந்தோம். இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர் ரவி அரசுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது நடிப்பில் வெளியான ‘ஜெயில்’, ‘செல்ஃபி’, ‘ஐங்கரன்’ என மூன்று படங்கள், ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகியிருக்கிறது. தொடர்ந்து என்னுடைய படங்களுக்கு பேராதரவு வழங்கி வரும் ஆஹா டிஜிட்டல் தளத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு உரிய முறையில் காப்புரிமை பெற்று அவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.

அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பேசுகையில், ”இளம் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் நேர்த்தியாக இயக்குநர் ரவி அரசு, ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார். இதனை வெற்றிப் படமாகவும் மாற்றியமைத்த ‘ஐங்கரன்’ படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப்படத்தின் மையக்கருவாக தன்னுடைய கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறுவதற்காக போராடும் இளம் விஞ்ஞானியின் வாழ்க்கையை போல், நிஜ இளம் விஞ்ஞானிகள் சிலரையும், தங்களின் கண்டுபிடிப்புகளுக்காக காப்புரிமை பெற்ற இளம் விஞ்ஞானிகள் சிலரையும் வரவழைத்து கௌரவிப்பது உண்மையிலேயே ஆஹா டிஜிட்டல் தள குழுவினர் மற்றும் ஐங்கரன் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கான முறையான அறிவிப்பை வெளியிட்டவுடன் குறுகிய காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள் தங்களது கண்டுபிடிப்புகள் குறித்த விவரங்களுடன் தொடர்பு கொண்டனர். அவற்றில் முப்பத்திமூன்று புதிய படைப்புகளையும், விஞ்ஞானிகளையும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். இதில் 50 சதவீதத்தினர் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பித்திருக்கிறார்கள். மேலும் சிலர் தங்களது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான பொருளாதார உதவி இல்லாமல், முறையான வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்கள் இங்கே வருகை தந்திருக்கும் காப்புரிமை பெற்ற இளம் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, காப்புரிமை பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு வருகை தந்திருக்கும் முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகள், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியான அனுபவம்.

மிகவும் சுவராசியமற்ற அறிவியல் விஞ்ஞானியின் உண்மை சம்பவத்தை பரபரப்பான வணிக சினிமாவாக உருவாக்கிய ‘ஐங்கரன்’ படக்குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். ஏனெனில் திரைப்படங்கள்தான் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் எழுச்சியை ஏற்படுத்தும் ஊடகங்கள். எந்த ஒரு நாடு புதிய கண்டுபிடிப்புகளுக்கும், புதிய ஆராய்ச்சிகளுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறதோ.. அந்த நாடுதான் முன்னேற்றம் அடையும். அந்த வகையில் இந்த நிகழ்வு, இளம் விஞ்ஞானிகளை பாராட்டி, அங்கீகாரமும் சிறிய அளவில் வழங்கியிருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.

இங்கு ஆரம்ப நிலை புற்று நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம், பெட்ரோலை சிக்கனமாக பயன்படுத்தும் புதிய உத்தி, வீடு கட்டும்போது அடிப்படை தளம் எழுப்புவதில் பொருளாதார சிக்கனத்தை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு, இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தொலைந்து போகாமல் இருக்க கடவுச்சொல்லுடன் கூடிய சாவி…போன்ற பல புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இவர்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சத்தின் மூலம் அவர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளை வணிக ரீதியாக பயன்படுத்தும் நிறுவனங்களின் பார்வைக்கு சென்று, நல்ல நேர்மறையான விளைவுகள் ஏற்படும். தமிழகமும் பொருளாதார ரீதியாக மேம்படும்.” என்றார்.

இதனைத் தொடர்ந்து இந்த விழாவிற்கு வருகை தந்த முப்பதிற்கும் மேற்பட்ட இளம் விஞ்ஞானிகளுக்கு படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் பிரத்யேகமான பரிசளித்து கௌரவித்தார்.

Related post