குழலி விமர்சனம்

“காக்கா முட்டை” விக்னேஷ் மற்றும் ஆரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “குழலி”. இப்படத்தை சேரா. கலையரசன் இயக்கியிருக்கிறார். டி.எம்.உதயகுமார் இசையமைத்துள்ளார்.
இன்னும் எத்தனை தலைமுறை? எதற்காக இந்த அடையாளம்? மன்னர் காலத்தில் அனைவரும் சமம் தானே? திடீரென வெள்ளையன் ஆண்ட போது, வேலையின் அடிப்படையில் உண்டாக்கிய பிரிவினையால் தானே சாதி என்ற சாக்கடை தேங்கியது? என்ற பல கேள்விகள் பல இடங்களில் தினம் தினம் மனதை வருடும். அப்படி பட்ட வருடலின் யதார்த்தம் “குழலி”. இல்லை, குழலியில் காதல்.,.
கதைப்படி,
நாயகன் விக்னேஷும், சமூகத்தால் உயர் சாதி என்று குறிப்பிடப்பட்ட ஒரு குடும்பத்துப் பெண்ணான ஆராவும், சிறு வயது முதல் ஒரே பள்ளியில் பயின்றுவர நட்பு காதல் அவதாரம் எடுக்கிறது. அங்கு ஆரம்பித்த பிரளயத்தின் விளைவு இந்த “குழலி”.
அவர்கள் இருவருக்கும் காதலை மீறிய கல்வித் தகுதியும் மேற்படிப்பு படிக்க, குறிப்பாக மருத்துவராகி கிராமத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற துடிப்பும் இருக்கிறது.
அதனால் காதலுக்கு சாதி தடையாக இருந்தது என்கிற வழக்கமான கதையை மீறி இவர்கள் கல்விக்கும் எப்படி சாதி தடையாக இருக்கிறது என்பது படத்தின் கதை.
முற்றிலும் யதார்த்தத்தையும் உண்மையானா ஒரு திரைக்கதையும் தான் இப்படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டதுடன் பரிசுகளையும் வென்றுள்ளது.
சலசலக்கும் ஓடைகள், சாரல் மழை, பச்சை போர்த்திய வயல்வெளிகள், தோட்டங்கள் என்று படம் முழுவதும் வளமை கொட்டிக் கிடைக்கிறது. அவற்றை உடமையாக்கிக் கொண்டோர் அங்கே வேலை செய்வதற்காக தாழ்த்தப்பட்டவர்களை பணிக்கு அமர்த்தும் நடைமுறையில் கோவில் விழாக்கள் மற்றும் திருமண உறவுகளில் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கிறது பகை. இவை அனைத்தையும் நேர்த்தியாக காட்டியதே இயக்குனரின் முதல் வெற்றி.
காதல் என்றாலே, முத்தக் காட்சி, கட்டி அணைக்கும் காட்சி தான் என்று சட்டம் போட்டது போல் அனைவரும் தவறாது கடைபிடித்து வர, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு அழகான பள்ளிப்பருவ காதலை காட்டியது இயக்குனரின் இரண்டாவது வெற்றி.
வாலிப வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை ‘ விக்னேஷுக்கு இந்தப் படம் சிறப்பான வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது. வயலில் ஆரா மயக்கம் போட்டு விழுந்ததைப் பார்த்ததும் தங்கள் கிராம கட்டுப்பாட்டுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அவளைத் தோளில் தாங்கி வைத்தியரிடம் வண்டியில் கொண்டு வரும் வேகத்தில் திகைக்க வைக்கிறார்.
பருவம் கொப்பளிக்கும் பள்ளி இறுதி மாணவியாக வளம் வரும் ஆராவும் அந்தப் பாத்திரத்தில் கன கட்சிதமாக பொருந்தியுள்ளார். அப்பாவித் தனமான முகமும், வெள்ளந்திச் சிரிப்புமே, அழகியாக அவரைக் காட்டுகிறது. கள்ளமில்லாத முகமும், களங்கமில்லாத மனமுமாக வரும் ஆராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஆங்காகே அவரின் குரல் உடைவதால், அடுத்த படம் முதல் டப்பிங் முயற்சித்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிடுவார் என்பது கருத்து.
விக்னேஷின் அப்பாவாக வரும் அலெக்ஸும் ஆராவின் தாயாக வரும் செந்தியும் கொடுத்த பாத்திரத்திற்கு நியாயம் கற்பித்துவிட்டனர்.
பிற பாத்திரங்களில் வரும் யாவரும் புதுமுகங்களே ஆனாலும் அப்படித் தெரியாமல் அவர்களது இயல்பான நடிப்பு நம்மை அந்த கிராமத்துக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது.
விக்னேஷின் நண்பர்களாக வரும் இளைஞர்களும் கொஞ்சம் கூட கேமரா கூச்சம் இல்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார்கள். அதுவும் உயரத்தில் மாற்றுத்திறன் கொண்ட அந்த இளைஞர் வரும் காட்சிகள் எல்லாம் அவரது குறைவில்லாத நகைச்சுவைத் திறனை எடுத்துக் காட்டுகின்றன. அவருக்கும் தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
சமீரின் ஒளிப்பதிவும், டி.எம்.உதயகுமாரின் இசையும் படத்திற்கு முதன் முக்கிய பலம், இசையை ரசிப்பதா? ஒளிப்பதிவை கண்டு வியப்பதா? என்று காட்சிக்கு காட்சி குழப்பம். இவர்களுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரும் அங்கீகாரம் காத்திருக்கிறது என்பது உறுதி.
பதைபதைக்கும் கிளைமாக்ஸ், அப்படி நடந்து விடக்கூடாது என்ற உணர்வை தந்தது.
எதிர்மறையான கருத்துகளுடனும், வேறொரு முடிவையும் இப்படத்தின் கிளைமாக்ஸாக வைத்திருக்கலாமோ? என்று எண்ணம் வந்தாலும், அப்படி இருந்தால் இது படமாக இருந்திருக்கும். உண்மையான உணர்வை நமக்கு தந்திருக்காது என்பது நிதர்சனம்.
அதேபோல் தங்களுக்குள் இருக்கும் காதலை விட கல்வியே பெரிது என்பதை விக்னேஷும் ஆராவும் தங்கள் பெற்றோரிடமோ, ஊர் உலகத்திடமோ, நம்மிடமே கூட இன்னும் அழுத்தமாக தெரிவித்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.
எல்லா சாதிய கொடுமைகளும் நடந்து கொண்டிருந்தும் பள்ளிகளில் இன்னும் சாதிகள் இல்லையடி பாப்பா என்று ஆசிரியை சொல்லிக் கொடுக்க அதை கோரசாக மாணவர்களும் சொல்லிக் கொண்டிருப்பது எத்தனை கேலிக்குரியது என்று விளக்கி இருப்பது இயக்குனரின் குரலாக ஒலிக்கிறது.
குழலி – கல்வியால் சாதி ஒழியாது, மனிதம் மட்டுமே மாற்றம் தரும். – (3.25/5)