Murungakai Chips Movie Review

 Murungakai Chips Movie Review
சாந்தனுவுக்கும், அதுல்யாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. முதலிரவில் சாந்திமுகூர்த்த சம்பிரதாயம் நடந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும் இல்லை என்றால் குழந்தை பாக்கியம் உண்டாகாது என்று அதுல்யாவின் அத்தை ஊர்வசி எச்சரித்து, கோவிலில் சன்னியாசி தந்த ருத்ராட்சத்தை அதுல்யாவின் சேலையில் முடித்து முதலிரவு அறைக்குள் அனுப்புகிறாள். சாந்தணுவின் தாத்தா k.பாக்யராஜ் சாந்திமுகூர்த்தம் இன்றிரவு நடந்தால் 300 கோடி சொத்துக்களை ஆசிரமத்திற்கு தந்துவிடுவேன். இன்றிரவு மட்டும் உன் சுண்டு விரல் கூட மனைவி மீது படாமல், சபலப்படாமல் பெரியோர் வார்த்தையை மதித்து நடந்தால் 300 கோடி சொத்துக்களை உன் பேருக்கு எழுதி வைப்பேன். இது நம் எட்டு தலைமுறையும் கடைபிடித்து வந்த விரதம் என்று சொல்லி அவன் கையில் மந்திரித்த மஞ்சள் கயிற்றைக் கட்டி விடுகிறார். 300 கோடி சொத்துக்கள் சாந்தனுவுக்கு கிடைத்ததா? இல்லை ஆசிரமத்துக்கு போனதா? என்பதுதான் கதை.
சாந்தனுவும் அதுல்யாவும் புதுமண தம்பதிகளாகவே மாறிவிடுகிறார்கள். உணர்ச்சி கலந்த கவர்ச்சிகர நடிப்பை இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். ஒரே அறையில் போரடிக்காமல் லாஜிக் பார்க்காமல் இயக்குனர் கதையை கையாண்ட விதம் அருமை. குளியலறை காட்சிகள் மற்றும் இருவருக்குமான நெருக்கமான விளையாட்டு காட்சிகளும் இன்னும் கூடியிருந்தால் ஏ சான்றிதழுக்கான காரணம் பொருத்தமாக இருந்திருக்கும். இது வயது வித்தியாசமின்றி குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படமாக தெரியவில்லை.
யோகிபாபு, முனீஸ்காந்த் காட்சிகளை விட மயில்சாமி, மதுமிதா, மனோபாலா சார் நடித்திருக்கும் காட்சிகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தயாரிப்பாளருக்குள் நல்ல ஒரு நடிகரும் பாடலாசிரியரும் இருப்பதை கண்டறிந்து பதிவு செய்தமைக்காக இயக்குனர் ஸ்ரீஜாரை பாராட்டலாம். இசையமைப்பாளர் தரண் குமாரின் பாடல் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்க்கிறது. இளமையான ஒளிப்பதிவை தந்த ரமேஷ் சக்கரவர்த்தியையும், காட்சிகளின் நீளத்தை சரியாக உணர்ந்து படத்தொகுப்பு செய்த படத்தொகுப்பாளர் ஜோமின் மேத்யூ மற்றும் படத்திற்கு கலை இயக்கம் புரிந்த நர்மதாவையும் பாராட்டலாம். இரட்டை அர்த்த வசனங்களை ஓரளவுக்கு கட் செய்த சென்சார் போர்டையும் பாராட்டலாம். இது பொழுதுபோக்கிற்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்று படக்குழுவினர் படத்தை திரையிடுவதற்கு முன்பே உறுதியளித்து இருப்பதால் அறிவாளிகள் திரையரங்குகளில் நுழைந்து விடாதீர்கள்.
முருங்கக்காய் சிப்ஸ் பார்வையாளர்களை சற்று முறுக்கேற்ற தான் செய்கிறது.

Related post