நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும் – நடிகர்சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்!

 நடிகர் சங்க கட்டிடம் சென்னையின் ஓர் அடையாளமாக இருக்கும் – நடிகர்சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66வது பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது:

நடிகர் நாசர் பேசும்போது,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66 வது பொதுக்குழு கூட்டம் மிக மிக சிறப்பாக இன்று நடைபெற்றது. சௌகார் ஜானகி அம்மாவிற்கு மரியாதை கொடுத்த நிகழ்வு உணர்வுபூர்வமாகவும் இருந்தது. இரண்டு வருடங்கள் காத்திருந்தாலும் அதைவிட வேகமாக செயல்படுவதற்கு இந்த பொதுக்குழு உத்வேகத்தை கொடுத்துள்ளது. இன்றுடன் பேச்சைக் குறைத்து நாளை முதல் முழுமூச்சாக செயலில் இறங்குவோம் என்றார்.

நடிகர் விஷால் பேசும்போது,

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நட்சத்திர இரவு விழா நடத்துவதா அல்லது வங்கியில் கடன் வாங்குவதா என்று பொதுக்குழுவில் ஒப்புதல் வாங்கியிருக்கிறோம். அதன்படி செயல்படுவோம். இதுவரை 70 சதவீத கட்டிடம் முடிக்கப்பட்டுள்ளது. உள் வடிவமைப்பையும் சேர்த்து இன்னும் 40 சதவிகித வேலை உள்ளது. இதை முடிப்பதற்கு இன்னும் 30 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்கான நிதியை எப்படி திரட்டலாம் என்று ஆலோசனை செய்துள்ளோம்.

இது ஒருபுறமிருக்க, தனிப்பட்ட முறையிலும் நடிகர் நடிகைகளிடம் கேட்டு, அவர்களிடமும் நிதியை திரட்ட உள்ளோம். நடிகர் சங்க கட்டிடம் என்பதால் நடிகர் நடிகைகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்பதற்கு நாங்கள் வெட்கப்படவில்லை.

அதேபோல், வங்கியிலும் கடன் வாங்க ஒப்புதல் வாங்கி விட்டோம். எல்லா வகையிலும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியை வசூல் செய்து எந்தளவுக்கு விரைந்து முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விரைந்து முடிப்போம்.

மேலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்த அணி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற செயல்படும். பொதுக்குழு சிறப்பாக நடந்து முடிந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தாதாசாகேப் பால்கே விருது வாங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தோம். அதேபோல் , பத்மஶ்ரீ விருது பெற்ற சவுகார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவிக்கப் பட்டது. பாரதி விஷ்ணுவர்த்தன், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கும் கவுரவிக்கப் பட்டார்கள்.

நேர்மறையாக தொடங்க இருக்கிறோம். இதன்பிறகு, கட்டடம் கட்டுவதற்கு எந்த தடங்களும், தடைகளும், சச்சரவுகளும் வராது என்று நம்புகிறோம். இது சாதாரண கட்டிடமாக இருக்காது. சென்னையில் ஒரு அடையாளமாகவே இருக்கும். வெளியூரில் இருந்து சென்னைக்கு வருபவர்கள் அனைவரும் ஒருமுறையாவது நடிகர் சங்க கட்டிடத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடும் வர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுகிறோம் என்றார்.

கார்த்தி பேசும்போது,

நடிகர் சங்க கட்டிடத்தின் மூலம் emi, காப்பீடு, ஓய்வுதியம், மருத்துவ செலவுகள், ஈமச்சடங்கு உதவி போன்ற செலவுகள் போக குறைந்தபட்சம் ஒன்றரை கோடியில் இருந்து இரண்டரை கோடி வரை மீதம் இருக்கும். இந்த வருமானம் போதுமானதாக இருக்கும் என்றார்.

Related post