தினமும் தண்ணி போடுவேன் – வைரலாகும் ரஜினியின் பேச்சு!

 தினமும் தண்ணி போடுவேன் – வைரலாகும் ரஜினியின் பேச்சு!

ஒய்.ஜி. மகேந்திரன் நடத்திய சாருகேசி நாடகத்தின் 50 ஆவது நாளுக்கு தலைமை விருந்தினராக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவரின் பல பேச்சுகள் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அவர் பேசியதாவது, “நான் 73 வயதிலும் இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய மனைவி லதாதான். நான் நடத்துனராக வேலை செய்யும் போது கெட்ட நண்பர்களால், கெட்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்டேன். நடத்துனராக இருக்கும் போதே நான் அசைவப்பிரியன் அது இரண்டு வேளை வேண்டும். தினமும் தண்ணி போடுவேன். சிகரெட் எத்தனை பாக்கெட் போகும்னு தெரியாது. அப்பவே நான் அப்படி இருந்திருக்கிறேன் என்றால், பணம் புகழ் வந்திருக்கும் போது நான் எப்படி இருந்திருப்பேன் என்று நினைத்து பாருங்கள்.

காலையிலேயே பாயா, ஆப்பம், சிக்கன் 65.. சைவம் சாப்பிடுகிறவர்களை பார்த்தால் பாவமாக இருக்கும். இதெல்லாம் எப்படி சாப்பிடுகிறார்கள் என்று தோன்றும். மது, சிகரெட், அசைவ உணவு இது மூன்றும் முறையற்ற காம்பினேஷன். இதனை அளவுக்கு மீறி சாப்பிட்டவர்கள் யாருமே 60 வயதுக்கு மேலே வாழ்ந்தவர்கள் கிடையாது. அதற்குள்ளேயே அவர்கள் போய் விட்டார்கள். அப்படி இருந்த என்னை அன்பாலேயே மாற்றியவர் லதா ரஜினிகாந்த். என்னை அன்பாலேயே மாற்றி, சரியான மருத்துவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி, என்னை ஒழுக்கமானவனாக மாற்றியவர் லதா ரஜினிகாந்த். உங்களுக்கே தெரியும் நான் கல்யாணத்திற்கு முன்பு எப்படி இருந்தேன். பின்னர் எப்படி மாறினேன்

ரஜினிகாந்த் பேசும் போது, 1975-ல் அபூர்வராகங்கள் படத்தில் நடித்திருந்தேன். அப்போது கண்ண தாசன் அவர்களின் மகனான கண்மணி சுப்பு அவரிடம் வெளியே எங்கயாவது ஷூட்டிங் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தேன்.

அதற்கு அவர் மயிலாப்பூர் கல்யாண மண்டபத்தில் ‘ரகசியம் பரம ரகசியம்’ நாடகத்தை நடத்துகிறோம். சுந்தர்ராஜன், ஜெய் சுதா ஆகியோர் நடிக்கிறார்கள். அங்கு வாருங்கள் என்று கூறி அவர் என்னை அங்கு வரவழைத்தார். உடனே நான் அங்கு சென்றேன். நான் செருப்பு போட்டு இருந்ததை பார்த்து, என்னை வெளியே இருந்தவர்கள் உள்ளே விட வில்லை.

அரை மணிநேரம் காத்திருந்தேன். என்னை அவர்கள் உள்ளே விடவே வில்லை. அதன்பின்னர் அபூர்வராகங்கள் படத்தின் ஆடை வடிவமைப்பாளர் என்னை பார்த்து என்ன சிவாஜி.. ( அப்போது ரஜினி பெயர் சிவாஜி ராவ்) இங்கே நிற்கிறீர்கள் என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றார். அங்கே சென்று பார்த்தால் நீள முடிவைத்த வாட்டசாட்டமான ஒருவர் பாலசந்தர் சாரையே டேய் பாலு.. அங்க பாரு,. இங்க பாரு என்று பேசிக்கொண்டிருந்தார்.

எனக்கு பாலச்சந்தர் சாரையே யார் இப்படி கூப்பிடுகிறார் என்று ஆச்சரியம். அதன்பின்னர் லட்சணமாக ஒரு பெண் வந்தார். யாரென்று பார்த்தால் அதுதான் யூ.ஜி.பார்த்தசாரதின் மனைவி.. அவர்கள் இருவரின் ஜோடி பொருத்தமும் அவ்வளவு அழகாக இருக்கும். அப்போதுதான் நான் நாடகத்திற்காக அவர்கள் எடுக்கும் பயிற்சியை நான் பார்த்தேன். அதன் பின்னர் அவர் குடும்பத்தில் ஒருவனாகி, 45 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு சிறப்பு விருந்தினராக இங்கு உட்கார்ந்து இருக்கிறேன் என்றால், இது காலத்தின் விளையாட்டு. இந்தக்காலம் யாரை எப்போது மேலே கொண்டு போகும், எப்போது கீழே இறக்கும் என்று தெரியாது.” என்று கூறினார்.

Related post