திருக்குறலை வைத்து உருவாக்கப்பட்ட கதை “வதந்தி”; SJ சூர்யா நடிப்பின் புதிய பரிமாணம்

 திருக்குறலை வைத்து உருவாக்கப்பட்ட கதை “வதந்தி”; SJ சூர்யா நடிப்பின் புதிய பரிமாணம்

திருக்குறலை வைத்து உருவாக்கப்பட்ட கதை “வதந்தி”; SJ சூர்யா நடிப்பின் புதிய பரிமாணம் – வதந்தி ட்ரைலர் வெளியீடு;

அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தமிழ் தொடரான ‘சுழல் – தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதளத் தொடரைத் தொடர்ந்து, புஷ்கர் – காயத்ரியின் சொந்த பட நிறுவனமான வால்வாட்சர் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘வதந்தி- ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதள தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழா பத்திரிகையாளர்கள் மத்தியில் சென்னையில் நடந்தது.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். அமேசான் ப்ரைம் வீடியோவில் டிசம்பர் 2ம் தேதி முதல் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ எனும் வலைதளத் தொடர் வெளியாகவுள்ளது.

அவ்விழாவில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், புஷ்கர்-காயத்ரி, லைலா, SJ சூர்யா, ஸ்ம்ருதி வெங்கட், நாசர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அதில், “வதந்தி” இணையத் தொடரைப் பற்றியும், படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை படக்குழு பகிர்ந்துக் கொண்டது.

இந்த தொடரின் தயாரிப்பாளர்களான புஷ்கர் – காயத்ரி :

பிரைம் வீடியோவுடன் எங்களுக்கு இது இரண்டாவது பயணம். ப்ரைம் வீடியோ, தரமான படைப்புகளை சர்வதேச அளவிலான மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒப்பற்ற சிறந்த டிஜிட்டல் தளம். ‘வதந்தி’ தொடரின் கதை கருவை சொன்னவுடன், இதன் மீது உள்ளார்ந்த ஈடுபாடுடன் அக்கறையும் செலுத்தி, படைப்பிற்கு தங்களது ஒத்துழைப்பை தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

எஸ். ஜே. சூர்யா சிறந்த மனிதர். அளவற்ற நேர் நிலையான ஆற்றலை கொண்டவர். இந்த தொடரில் நடிப்பின் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் இயக்குநரான ஆண்ட்ரூ லூயிஸ், லயோலா கல்லூரியில் வகுப்பறை தோழர்.

பட்டப் படிப்பு முடித்தவுடன் எஸ். ஜே. சூர்யாவிடம் உதவியாளராக சேர்ந்தவர். அதனால், அவருக்கும் எங்களுக்குமான இணக்கம், தொடர்பு அதிகம். இந்தத் தொடரில் சஞ்சனா என்ற இளம் பெண்ணை கதாநாயகியாக அறிமுகப்படுத்துகிறோம்.

நடிகர் எஸ். ஜே. சூர்யா :

இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன் முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம்,’ நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா’ என்றேன்.

இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

தயாரிப்பாளர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் தெளிவான திட்டமிடல், ப்ரைம் வீடியோவின் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிசின் கடின உழைப்பு இவையெல்லாம் எனக்கு கிடைத்த ஆசீர்வாதங்கள்.

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

‘உண்மை நடக்கும். பொய் பறக்கும்’ என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம், என்றார்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் :

வதந்தி – இந்த சமுதாயத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இருக்கிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால், மனிதன் தன்னுடைய பொழுதுபோக்கிற்கு கண்டுபிடித்த முதல் விசயமே வதந்தி தான் என்று நான் நினைக்கிறேன். ‘யாகவாராயினும் நா காக்க..’ என்னும் திருக்குறளில், யார் எதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலும், வாயிலிருந்து வெளியாகும் வார்த்தைகளையாவது கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இது திருக்குறள். இந்த திருக்குறளை இதுவரை வலிமையாகவும், கூர்மையாகவும் ரசிக்கும் வகையில் யாரும் கதையாக சொல்லவில்லை. ஒருவேளை இதை நேர்த்தியாக சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். இதை எப்போது சொன்னாலும் நன்றாக இருக்கும் என நம்பினேன்.

என்னுடைய திரையுலக பயணத்தை எஸ் ஜே சூர்யாவிடமிருந்து தான் தொடங்கினேன். அவரையே இந்த தொடரில் இயக்கியிருப்பது என்னுடைய கனவு நனவானது போல் உணர்கிறேன். எஸ் ஜே சூர்யா இயக்குநர் மற்றும் நடிகர். ஆனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தவுடன் அவர் நடிகராக மட்டுமே இருக்கிறார்.

 

Related post