காமி விமர்சனம் 3/5
இயக்கம்: வித்யாதர் காகிடா
நடிகர்கள்: விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி, அபிநயா, ஹைகா பெட்டா,
இசை: ஸ்வீகர் அகஸ்தி
பின்னணி: நரேஷ் குமரன்
ஒளிப்பதிவு: விஸ்வாந்த் ரெட்டி
தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
கதைப்படி,
கதை மூன்று கதைகளமாக நகர்கிறது. முதல் கதையில், நாயகன் விஸ்வக் அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்களின் விரல் பட்டாலே, நாயகன் விஸ்வக்கின் உடல் கருப்பாக மாறி மயங்கி விழுந்து விடுகிறார். இது சரியாக வேண்டுமென்றால், இமயமலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அரியவகை மிளிரும் காளானால் மட்டுமே முடியும் என்கின்றனர் பெரியவர்கள்.
அந்த காளானை பறிக்க இமயமலை பயணிக்கிறார் விஸ்வக்.
இரண்டாம் கதையில், சில விஞ்ஞானிகள் பல இளைஞர்களை அறைக்குள் அடைத்து வைத்து, அவர்களின் மூளையில் ஒருவிதமான ஆராய்ச்சி செய்வதாகக் கூறி அவர்களை சித்ரவதை செய்கின்றனர்.
மூன்றாம் கதையில், தேவதாசியாக வரும் அபிநயா, சில கயவர்களிடம் இருந்து தனது மகளைக் காப்பாற்ற போராடுகிறார்.
இந்த மூன்று கதைகளும் எந்த இடத்தில் மையப்படுகிறது என்பதே படத்தின் மீதிக் கதை. நாயகன் அந்த காளானை பறித்தாரா இல்லையா என்பதற்கான விடையும் இரண்டாம் பாதியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாயகன் விஸ்வக், காடு, மலை, பனி என்று பாராமல் உடலை வருத்திக் கொண்டு நடிப்பை செவ்வெனக் கொடுத்திருக்கிறார். பல இடங்களில் மிக அமைதியாக வந்து நச்’சென ஸ்கோர் செய்திருக்கிறார்.
மற்ற நடிகர்களும் தங்களால் முடிந்த நடிப்பினைக் கொடுத்திருக்கின்றனர். படத்தின் மிகப்பெரும் பலம் என்றால் அது ஒளிப்பதிவு மட்டுமே. மிகவும் ரம்மியான ஒளிப்பதிவைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஸ்வாந்த் ரெட்டி.
பின்னணி இசையும் பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. விஎப் எக்ஸ் மற்றும் சிஜி பணிகளில் நன்றாகவே படக்குழு மெனக்கெடல் செய்திருக்கிறது.
கதை பெரிதாக இல்லையென்றாலும் திரைக்கதை நகரும் விதம் படத்தினை பார்க்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
காமி – பிரமிக்க வைக்கும் காட்சியமைப்பு…