கண்ணகி விமர்சனம்

 கண்ணகி விமர்சனம்

இயக்கம்: யஷ்வந்த் கிஷோர்

நடிகர்கள்: கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, மயில்சாமி, வெற்றி, யஷ்வந்த் கிஷோர்

இசை: ஷான் ரகுமான்

ஒளிப்பதிவு: ராம்ஜி

கதைப்படி,

கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, உள்ளிட்ட நான்கு ஹீரோயின்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. முதல் கதையாக கீர்த்தி பாண்டியன், வயிற்றில் நான்கு மாத சிசுவோடு அதை கலைப்பதற்கு, யஷ்வந்த் கிஷோரோடு பயணப்படுகிறார். செல்லும் மருத்துவமனையில் எல்லாம் கலைக்க முடியாது எனக் கூற, செய்வதறியாது திகைக்கின்றனர் இருவரும்.

இரண்டாம் கதையாக வித்யா பிரதீப், கணவன் விவகாரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். ஆனால், விவாகரத்து தரமுடியாது என்பதில் உறுதியாக நிற்கிறார் வித்யா பிரதீப். இவருக்காக வாதாடுகிறார் வெற்றி. ஒரு கட்டத்தில் இறுக்க மனதோடு விவாகரத்தும் கொடுத்து விடுகிறார் வித்யா.

மூன்றாம் கதையாக அம்மு அபிராமி, பல மாப்பிள்ளைகள் வந்து வந்து பெண் பார்த்து சென்றும் அம்மு அபிராமியின் திருமணம் ஏனோ தள்ளி தள்ளிச் செல்கிறது. இதனால், அம்மாவான மெளனிகா மற்றும் அப்பாவான மயில்சாமி இருவரும் கவலையோடு இருக்கின்றனர்.

நான்காம் கதையாக ஷாலின், தனக்கு பிடித்த குடி, சிகரெட், ஜாலி என இந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஷாலின். இவரும் ஆதேஷ் சுதாகரும் லிவிங் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ஷாலினை பிடித்துப் போக ஆதேஷ் திருமணம் செய்ய சம்மதம் கேட்கிறார். திகைத்து நிற்கிறார் ஷாலின்.

இவர்கள் நால்வரின் முடிவு தான் என்ன.? இவர்கள் நால்வருக்கும் இருக்கும் தொடர்பு என்ன என்பதே படத்தின் மீதிக் கதை.

படத்தில் நடித்த நான்கு ஹீரோயின்களுமே தங்களுக்கு கொடுக்கப்பட்டதை அளவோடு செய்து முடித்திருக்கின்றனர். கதாபாத்திரங்களாகவே மாறி, கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர் நால்வரும்.

தனது தந்தையைஇழந்து மனம் உடைந்து அழும் காட்சியில் அம்மு அபிராமியாக இருக்கட்டும், கணவனையும் பிரிந்து மனதில் நினைத்த காதலனையும் பிரிந்து நிற்கும் தருணத்தில் வித்யா பிரதீப்பாக இருக்கட்டும், அனைத்து ஆண்களும் ஒரே எண்ணம் கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள் என்று தனது தந்தையை நினைத்து அழும் ஷாலினாக இருக்கட்டும், மனதிற்கு அவ்வளவு வலியை வைத்துக் கொண்டும் வயிற்றில் சிசுவை சுமந்து கொண்டும் அழுத்தமான வாழ்வை வாழ்ந்து வரும் கீர்த்தி பாண்டியனாக இருக்கட்டும் நடிப்பில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டனர்.

பெண்களின் வாழ்க்கையை, அவர்கள் என்ன மாதிரியான சவால்களை சந்திக்கின்றனர், அதை அவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்பதை தெளிவாக கொண்டு வந்து காட்டியதற்காக இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

ஷான் ரகுமானின் இசையில் பின்னணி இசை படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது.

க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சிகள் ஓகே என்றாலும், அனைத்து தரப்பையும் எளிதில் சென்றடையுமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாகவே இருக்கிறது.

மயில்சாமியும் அம்மு அபிராமியும் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நிச்சயம் வைரலாகும். வலுவானது.

இயக்குனராக யஷ்வந்த் கிஷோர் வென்றிருக்கிறார்.

கண்ணகி – வலுவானவள்… –  3/5

Related post