பரம்பொருள் விமர்சனம்
அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி நாளை திரைக்கு வர இருக்கும் திரைப்படம் தான் “பரம்பொருள்”.
சிலைகடத்தலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படம், என்ன மாதிரியான திரைக்கதையை கொண்டிருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
கதைப்படி,
தனது தங்கையின் ஆப்ரேஷனுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுவதால், வீடுகளில் புகுந்து திருட்டு வேலைகளை செய்து வருகிறார் அமிதாஷ். போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் சரத்குமார், பணம் ஒன்றே குறிக்கோளாக நினைத்து தனது அதிகாரத்தை வைத்து பல வழிகளில் பணம் சம்பாதித்து வருகிறார். கோடிகளில் பணம் வேண்டும் என்று பணத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருப்பவர்..
ஒருநாள், சரத்குமாரின் வீடு என்று தெரியாமல் அவர் வீட்டிற்கு திருடச் சென்று அவரிடம் மாட்டிக் கொள்கிறார் அமிதாஷ்.,
உன் மீது வழக்கு தொடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் நான் சொல்வதை நீ கேட்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார் சரத்குமார்.
அமிதாஷும் ஓகே எனக் கூற, இவர்களின் கைகளுக்கு 1000 ஆண்டு பழமையான சிலை ஒன்று கிடைக்கிறது. அது பல கோடிக்கு விலை போகும் என அறிந்து, அதை விற்பதற்கு தயாராகிறார்கள்.
12 கோடி ரூபாய்க்கு அந்த சிலையை வாங்குவதற்கு ஆள் கிடைத்த நேரத்தில், சிலை முற்றிலுமாக சேதமடைந்து விடுகிறது. இதனால், இருவரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இறுதியாக, அமிதாஷ் தனது தங்கையின் மருத்துவ செலவுக்கு பணத்தை ஈட்டினாரா.?? சரத்குமாரின் எண்ணம் பழித்ததா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.,
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் வில்லனாக நடித்த அமிதாஷ் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதையின் போக்கிற்கு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள சிரமப்பட்ட அமிதாஷ், போக போக கதைக்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு முழு ஹீரோவாக ஜொலித்திருந்தார்.
தன் குடும்பத்திற்காக, தன் தங்கைக்காக அவர் படும் கஷ்டங்களை கண்கள் மூலமாக வெளிப்படுத்தும் போது நடிப்பின் உச்சத்தை எட்டி விட்டார். ஆக்ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார்.
போர் தொழில் படத்தில் கொடுத்த அதே நடிப்பை இப்படத்திலும் கொடுத்து அசத்தியிருக்கிறார் சரத்குமார். போர் தொழில் கதாபாத்திரத்தை விடுத்து, இக்கதாபாத்திரத்தை ஏற்றுக் கொள்ள சற்று நாழிகள் எடுத்துக் கொண்டாலும், தனக்கான கதாபாத்திரத்தை தெளிவாக செய்து முடித்திருக்கிறார் சரத்குமார்.
இக்கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று கூறும் அளவிற்கு தனக்கான முத்திரை நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் சரத்குமார். அமிதாஷுக்கு இணையாகவே சண்டைக் காட்சியிலும் மிரள வைத்திருக்கிறார்.
காஷ்மீரா கதையின் நாயகியாக வந்திருக்கிறார். மிகவும் வலுவான கேரக்டரை ஏற்று நடித்திருந்தாலும், இன்னும் சற்று மெனக்கெடல் கொடுத்து நடித்திருக்கலாமே என்று தோன்றும் அளவிற்கான நடிப்பையே கொடுத்திருந்தார்.,
படத்தின் பில்லராக நிற்பது கதை மட்டுமே. சிலை கடத்தலை மையப்படுத்தியும் அதற்குள் நடக்கும் ஒரு வகையான விளையாட்டுமே இப்படத்தின் மூலக் கதையாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ராஜ்.
முதல் பாதி கதையின் மீது வலு இல்லை என்றாலும், இரண்டாம் பாதி டாப் கியர் போட்டு செல்லும் அளவிற்கு திரைக்கதையில் வேகம் ஏற்றியிருக்கிறார் இயக்குனர். இது அனைத்தையும் தூக்கும் அளவிற்கு க்ளைமாக்ஸ் காட்சியில் வைக்கப்பட்ட ட்விஸ்ட் காட்சி யாரும் எதிர்பார்க்காத ஒன்று.
ட்விஸ்ட் காட்சியையும் மிக தெளிவாக கொடுத்து, அனைத்திற்கும் விளக்கமும் கொடுத்து தனது இயக்கத்தின் திறமையை நச்சென்று நிரூபித்திருக்கிறார் அரவிந்த்ராஜ்.
யுவன் ஷங்கர் ராஜா தனது இசையில் இன்னும் மெனக்கெடலை கொடுத்திருந்திருக்கலாம். வேகமாக செல்லும் கதையில், இந்த இடத்துல இந்த பாட்டு தேவையா என இரண்டு இடங்களில் கேட்க வைத்துவிட்டார்கள். யுவனின் பின்னணி இசையா இது என சந்தேகம் எழும் அளவிற்கு கொடுத்திருக்கிறார் யுவன்.
பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து அசத்தியிருக்கிறார். சண்டைக் காட்சி கூடுதல் கவனம் பெறுகிறது.
இரண்டாம் பாதியின் வேகம் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் படத்தினை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றதால்,
பரம்பொருள் – ப்ளாக் பஸ்டர்.. – 3.5/5