பாபா பிளாக் ஷீப் விமர்சனம்
டிஜிட்டல் தளங்களில் தனது சமூக கருத்தை பேசி வரும் ராஜ் மோகன், தனது அறிமுக படமாக “பாபா பிளாக் ஷீப்” படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில், யூடியூப் தளத்தில் பிரபலமான ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், சேட்டை ஷெரீஃப், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும், விருமாண்டி அபிராமி, அம்மு அபிராமி, வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கதைப்படி,
ஆண்கள் பள்ளி, இருபாலர் பள்ளி என இரு பள்ளிகளை ஒரே வளாகத்தில் நடத்தி வருகிறார் சுரேஷ் சக்ரவர்த்தி. சுரேஷ் சக்ரவர்த்தி இறந்து விட, இரு பள்ளியையும் ஒரே பள்ளியாக நடத்த திட்டமிடுகின்றனர் சுரேஷ் சக்ரவர்த்தியின் மகன்கள்.
இதனைத் தொடர்ந்து இரு பள்ளிகளும் ஒரு பள்ளியாக்கப்படுகிறது. இரு பாலர் பள்ளியின் 5 பேரும், ஆண்கள் பள்ளியின் 5 பேரும் கடைசி பெஞ்ச்’க்கு சண்டை போடுகிறார்கள்.
இதற்காக அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை வருகிறது. Election, Examination, Exhibition இந்த மூன்றை வைத்து கடைசி பெஞ்ச்’க்கு தகுதி யார் என்று போட்டி நடத்தப்படுகிறது.
ஒருகட்டத்தில் இரு டீமும் ஒன்று சேர, பள்ளி வளாகத்தில் தற்கொலை கடிதம் ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள் இவர்கள்.. அந்த கடிதம் யார் எழுதியது.? எதற்காக அந்த மாணவர் எழுதினார் என்பது தான் படத்தின் மீதிக் கதை..
நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், இருவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டயலாக் டெலிவரி, உடல் மொழி என இரண்டிலும் தேர்ச்சி பெற்ற நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர் இருவரும். முதல் படம் என்பது போல் இல்லாமல், அனுபவ நடிகர் போன்ற நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
தனது கண்களால் படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறார் அம்மு அபிராமி. ஓவர் மீட்டர் நடிப்பை சற்று குறைத்திருக்கலாம்..
சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்டத்தை தனது அனுபவ நடிப்பால் கவர்ந்திழுத்திருக்கிறார் விருமாண்டி அபிராமி..
பள்ளி மாணவராக ஆர்.ஜே.விக்னேஷ் நடித்திருக்கிறார். காமெடி என்ற பெயரில் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன் கொடுப்பதாக நினைத்து செய்யும் கலாட்டாக்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
இரண்டாம் பாதியில் பாதிக்கு மேல் தான் கதை நகர ஆரம்பிக்கிறது. மாணவர்களின் மன அழுத்தம், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனை, பெற்றோர்களுடன் மனம் விட்டு பேசுவது என மாணவ, மாணவியர்களின் முக்கிய பிரச்சனை கையில் எடுத்து அதை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜ் மோகன்.
சொல்ல வந்த கதையை நன்றாக அழுத்தமாகவே பதிந்திருக்கலாம். முதல் பாதி முழுவதும் அரட்டை என்ற பெயரில் செயற்கையான கதை நகர்வே இருக்கிறது.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.
சுதர்சன் ஸ்ரீநிவாசனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல். காட்சிகள் ஒவ்வொன்றும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
இயக்கத்திலும் கதையிலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கும் ராஜ் மோகனுக்கு வாழ்த்துகள்.,
பாபா பிளாக்ஷீப் – தூற்றும்படியாகவும் இல்லை, போற்றும்படியாகவும் இல்லை… – 2.75/5