சினிமாவில் எனக்கு ஒரு இடம் கிடைக்கும் வரை தொடர்ந்து உழைப்பேன் – டாக்டர் பட புகழ் கராத்தே கார்த்தி

 சினிமாவில் எனக்கு ஒரு இடம் கிடைக்கும் வரை தொடர்ந்து உழைப்பேன் – டாக்டர் பட புகழ் கராத்தே கார்த்தி

‘என்னை அறிந்தால்’, ‘கைதி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ‘சித்திரை செவ்வானம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கராத்தே கார்த்தி. ‘டாக்டர்’ படத்தில் வில்லனுக்கு வலதுகரமாக கோமதி அக்கா கேரக்டரில் கவனத்தை ஈர்த்து பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘கூமன்’ என்கிற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்திலும் பாராட்டைப் பெற்றுள்ளார்.

இவர் கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங்களை வென்றவர். தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.

நான் மதுரைக்காரன். சின்ன வயசிலிருந்தே சினிமான்னா எனக்கு உயிர். ஆனால் மத்திய ரிசர்வ் போலீஸில் நான் வேலை பார்த்து வந்தேன். என் துறை அணிக்காக கராத்தே, பாக்ஸிங்கில் பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ளேன். எஸ்.ஐ ஆக புரமோஷன் கிடைக்க வேண்டிய நேரத்தில் 2006இல் வேலையை விட்டுவிட்டு இனி சினிமாதான்னு முடிவெடுத்து இறங்கிட்டேன்.

அதன் பிறகு நிறைய சிரமங்களை அனுபவித்தேன். ‘தசாவதாரம்’ படத்தில் 150 ரூபாய் சம்பளத்தில் கூட்டத்தில் ஒருவனாய் நடித்தேன். ஆரம்பத்தில் இப்படியான வாய்ப்புகள்தான் வந்தது. பிறகு 350 ரூபாய் சம்பளத்தில் ஜிம்பாய் வேலை செய்தேன். அப்போதெல்லாம் என் மனைவிதான் குடும்பத்தை கவனித்துக்கொண்டார். 2012 வரை சீரியல்களில் நடித்தேன். ‘ஆனந்தம்’, ‘கோலங்கள்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தேன். 2014லில் ’என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துடன் டயலாக் பேசுவது போன்ற வாய்ப்பு வந்தது. சில்வா மாஸ்டர்தான் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். அதிலிருந்து சினிமாவை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன்.

தோல்விகளை மட்டுமே சந்தித்துக்கொண்டிருந்த எனக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சண்டைக் காட்சியை பார்த்து கைதி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. பிறகு இயக்குனர் நெல்சன் ‘டாக்டர்’ படத்தில் எனக்கு வாய்ப்பு தந்தார். கோமதி அக்கா கேரக்டருக்கு நல்ல ரீச் கிடைத்தது. என் வாழ்க்கையின் முக்கியமான மாற்றம் ’டாக்டர்’ படத்தில் இருந்து தொடங்கியுள்ளது. இதோ ‘ஜெயிலர்’ படத்தில் மறுபடியும் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஏற்கனவே ‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்திருக்கிறேன். நான் ரஜினி சாரின் தீவிர பக்தன். இதை பேட்ட ஷூட்டிங்கிலேயே அவரிடம் சொல்லி ஆசி வாங்கியிருக்கேன். இப்போ தலைவருடன் ‘ஜெயிலர்’ படத்தில் நடிப்பதை பாக்கியமாக நினைக்கிறேன்.

”எனது திரை வாழ்வில் முக்கியமான கட்டத்தை ஆரம்பித்து வைத்தது ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாதான். கூமன் படம் பார்த்த அனைவரும் என்னை வெகுவாக பாராட்டியதை என்னால் மறக்க முடியாது.

மேலும், எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன். ஆனால் வில்லன் வேடம்னா எனக்கு எக்ஸ்ட்ரா போனஸ். வில்லன் நடிகர்களில் அசோகன், நம்பியார், ரகுவரன், பிரகாஷ்ராஜ் போல தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு இடம் கிடைக்க தொடர்ந்து உழைப்பேன் என்று கூறினார்.

Related post