தசரா திரைவிமர்சனம் – (3.5/5)

 தசரா திரைவிமர்சனம் – (3.5/5)

நானி, கீர்த்தி சுரேஷ், தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில், ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “தசரா”.

எதைப் பேசுகிறது இப்படம்?

நட்பு, காதல், காமம் என சில எமோஷன்களை கொண்டு உருவாகியுள்ளது இக்கதை. அதில், நட்பிற்காக பழி வாங்க நினைக்கும் கோபம் ஜெயிக்குமா? அல்லது காமத்திற்காக எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற அரக்க குணம் ஜெயிக்குமா? என்பதை இப்படம் பேசுகிறது.

கதைப்படி,

முழுக்க முழுக்க நிலக்கரி சூழ்ந்துள்ள, காற்றே கருப்பாக வீசும் வெறும் 160 குடும்பத்துடன் ஓர் ஊரில் நானி தன் நண்பர்களுடன் சேர்ந்து நிலக்கரி திருடி வாழ்க்கையை ஓட்டுகிறார்.

அப்படி சந்தோஷமாக செல்லும் வாழ்க்கையில் தன் நண்பனுக்காக உயிரையே கொடுக்கும் நானி, தன் நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்து தான் கீர்த்தி சுரேஷ் மீது வைத்துள்ள காதலை மறைக்கின்றார்.

ஒரு கட்டத்தில் தன் நண்பன் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் திருமணம் வரை செல்ல, அன்று இரவே அது நானி நண்பனுக்கு தெரிய வருகிறது.

இதனால் நானி மிக மன வேதனை அடைய, அன்றிரவு நானியை சந்தித்து பேச வரும் நண்பனை ஒரு கூலிப்படை நானி கண்முன்பே கொல்கிறது. இவரை யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்பதே மீதிக்கதை.

நானியை லவ்வர் பாயாகவே பார்த்து பழகிவிட்டோம். அதற்குள் ரக்கட் பாயாக வந்துவிட்டாரே, அதுவும் வெறித்தனமான ரக்கட் பாய், எந்நேரமும் குடியை மட்டுமே நினைத்து வாழும் ஊர் மக்கள்.

குடியால் நடக்கும் மிகப்பெரும் அரசியல் அதை தொடர்ந்து நடக்கும் தேர்தல் என ரங்கஸ்தலம் படத்தின் சாயல் கொஞ்ச ஹெவியாகவே முதல் பாதியில் உள்ளது, படமும் விறுவிறுவென செல்கிறது.

ஆனால், இரண்டாம் பாதியில் நண்பர் இறந்ததும், நானி எடுக்கும் சில முடிவுகள் அதை தொடர்ந்து வரும் காட்சிகள் கொஞ்சம் மெல்ல நகர்ந்தாலும், கிளைமேக்ஸ் நெருங்க படம் பற்றிக்கொள்கிறது.

அதிலும் கிளைமேக்ஸ் 100 பேர் வந்தாலும் நானி கத்தியால் குத்தி கிழிக்கும் காட்சி கொஞ்சம் யதார்த்தம் மீறியிருந்தாலும், திரையில் பார்க்க கூஸ்பம்ஸ் தான்.

கீர்த்தி சுரேஷ் அப்படியே கதாபாத்திரமாக ஜொலிக்கின்றார்.

மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ முதல் தெலுங்கு படத்திலேயே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக, கீர்த்தி சுரேஷை காம எண்ணத்துடன் அவர் பார்க்கும் காட்சி. க்ளைமாக்சில் சண்டை நடக்கும் போது, எந்த சம்பந்தமும் இல்லாதது போலும், யார் வந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற வீரத்தோடும் அவர் நிற்கும் காட்சியில் மிரட்டியுள்ளார்.

படம் முழுவதும் நிலக்கரி புகை, ஒரு விதமான டார்க் டோன் ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்திய விதம் அருமை, சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

Related post