சொந்த காசில் ஆம்புலன்ஸ் வாங்கித் தந்த பாலா.. தொடரும் சேவை!
விஜய் தொலைக்காட்சியில் KPY நிகழ்ச்சி மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தவர் நடிகர் பாலா.
இவர் நடிகராக மட்டுமல்லாது சமூக சேவை செய்வதிலும் வல்லவர். தொடர்ந்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து கொண்டே வருகிறார்.
பல கிராமங்களுக்கு தண்ணீர் வசதி அமைத்து கொடுப்பது, ஏழை எளிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்வது, உணவளிப்பது, ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுப்பது என பல உதவிகளை செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டு வந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைந்திருக்கிறது நெக்னா மலைக்கிராமம். நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவைப்போல் இருக்கிற நெக்னாவுக்குச் செல்ல வேண்டுமானால், மலையடிவாரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் நடைபயணமாகத்தான் செல்ல வேண்டும்.
நோயுற்றவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்களை டோலி கட்டி தூக்கிச் செல்ல வேண்டிய அவலநிலையில் இருக்கின்றனர் நெக்னா கிராம மக்கள்.
இந்த நிலையில், நெக்னா கிராம மக்களுக்காக ஆம்புலன்ஸ் ஒன்றை தனது சொந்த பணத்தில் இருந்து வாங்கி கொடுத்திருக்கிறார் நடிகர் பாலா.
இவரது இந்த செயலுக்கு தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.