மன்சூர் அலிகான் நடத்தும் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி

 மன்சூர் அலிகான் நடத்தும் புதிய பிக்பாஸ் நிகழ்ச்சி

கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட, அதில் பங்கேற்க இருப்பதாக சொல்லப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவில் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதிலும், ”நான் வந்தா பிக் பாஸாக தான் வருவேன்” என்று பஞ்ச் வேற அடித்துள்ளார் மன்சூர் அலிகான்.

இந்த நிலையில், புதிய வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை நடத்தப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்திருந்தார். இது உண்மையா?, புதிய பிக் பாஸ் நிகழ்ச்சி சாத்தியமா? என்பது குறித்து நடிகர் மன்சூர் அலிகானையே தொடர்பு கொண்டு கேட்டபோது,

”பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன், என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் தொடர்ந்து நான் அதில் பங்கேற்கப் போவதாக செய்திகள் பரவியது. அதனால் தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் பிக் பாஸாக போட்டியை நடத்துவேன், என்று கூறினேன். நான் கூறியது வைரலாகி இப்போது அதுபற்றி என்னிடம் ரசிகர்க்களும், மக்களும் கேட்க தொடங்கிவிட்டார்கள்.

எனவே, இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மக்களுக்கும் நாட்டுக்கும் பயன்படும் வகையில் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சியாக நடத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. இதை வித்தியாசமான, புதிய வகை பிக் பாஸ் என்று எடுத்துக்கொண்டாலும் தவறில்லை.

நான் சொல்லும் யோசனைபடி பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்தால் இயற்கை விவசாய புரட்சி ஏற்படும். விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். இங்கு வெற்றியாளர், தோல்வியடைந்தவர் என்று இருக்காது. அனைவருக்கும் விருது வழங்கப்படும். நம்மாழ்வார் உள்ளிட்ட விவசாயத்திற்காக பாடுபட்டவர்களின் பெயரில் விருதுகள் வழங்கப்படும்.

நான் குதிரை மீது வந்து தான் போட்டியில் பங்கேற்பேன். எலிமினேஷன் ஆகிறவர்கள் எருமை மாட்டை குளிப்பாட்ட வேண்டும். மாடுகளை வளர்க்க வேண்டும், யானைகளை கட்டி போரடிக்க வேண்டும். இப்படி பல வகையான போட்டிகளை நடத்துவேன்.

இந்த போட்டியில் உள்ளூர் போட்டியாளர்கள் மட்டும் அல்ல வெளிநாட்டில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்துக்கொள்ளலாம். இதன் மூலம் வெளிநாட்டினரின் அதிநவீன விவசாய கருவிகள் நம் நாட்டுக்கு வரும். மரம் ஏறுவதற்கு சரியான கருவி இல்லாமல் நாம் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு போட்டி நடத்தினால் நமக்கு பல அதிநவீன கருவிகளும், கண்டுபிடிப்பாளர்களும் கிடைப்பார்கள்.

மேலும், விவசாயத்தின் மீது தற்போதைய தலைமுறைக்கு ஆர்வம் ஏற்படுவதோடு, இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட ஒரு வழியாகவும் இந்த போட்டி அமையும். இதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய இயற்கை விவசாய புரட்ச்சி ஏற்படும்.

இன்று விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் செயற்கைத்தன்மை வாய்ந்ததாகவும், ஹைப்ரீட் வகைகளாகவும் இருக்கிறது. இதனால் சிறுவயதில் பல நோய்களுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இப்படி ஒரு போட்டி மூலம் இயற்கை முறையில் காய்கறி வளர்த்தலையும், இயற்கை உணவு சமைத்தல் போன்றவற்றை கொண்டு புதிய வகையிலான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தினால், அது வியாபார அளவில் மட்டும் இன்றி மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்கும்.” என்றார்.

 

Related post