கோயம்புத்தூர் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக அளித்த கமல்ஹாசன்!

 கோயம்புத்தூர் ஷர்மிளாவிற்கு காரை பரிசாக அளித்த கமல்ஹாசன்!

கோயம்புத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றவர் ஷர்மிளா. இவரின் வீடியோக்கள் சமீபத்தில் அவ்வப்போது ட்ரெண்டாகி வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பேருந்தின் ஓனரோடு ஏற்பட்ட மனக்கசப்பில் அங்கிருந்து நிறுத்தப்பட்டார்.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஷர்மிளாவை நேரில் அழைத்து கார் ஒன்றை பரிசாக் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “ தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் முதல் பெண் ஓட்டுநர் வசந்தகுமாரி, முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி போல கோயம்புத்தூரில் முதன்முறையாக தனியார் பேருந்து ஓட்டுநராக இருந்தவர் ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும் தன்னுடைய கனவிற்காக உழைத்து, சவாலான பணியை திறம்படச் செய்து வந்தார். அதற்காகப் பல்வேறு தரப்பின் பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார். தன் வயதையொத்த பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்தைய விவாதம் என் கவனத்திற்கு வந்தது. மிகுந்த வேதனை அடைந்தேன்.

ஷர்மிளா ஓர் ஓட்டுநராக மட்டுமே இருந்துவிடவேண்டியவர் அல்ல. பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என் நம்பிக்கை. கமல் பண்பாட்டு மையம் தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது. வாடகைக் கார் ஓட்டும் தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும் தொடரவிருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில், ஒரு பண்பட்ட சமூகமாக நாம் அவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகள் ஷர்மிளாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

Related post