லியோ டிக்கெட் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை; மாவட்ட கலெக்டர்கள் போட்ட உத்தரவு!

 லியோ டிக்கெட் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை; மாவட்ட கலெக்டர்கள் போட்ட உத்தரவு!

‘லியோ’ படம் சிறப்புக் காட்சி திரையிடப்படும் திரையரங்குகளில் விதிமீறல் ஏற்பட்டால் புகார் அளிப்பதற்காக பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் புகார் எண்களை அறிவித்திருக்கிறார்கள்.

வேலூர் கலெக்டர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: “வேலூர் மாவட்டத்தில் லியோ திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளில் 19.10.2023 முதல் 24.10.2023 வரை கூடுதலாக சிறப்புக் காட்சி (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) நடத்திடவும், தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்கும் முடிவடையும் வகையில் திரையிடுமாறு அரசு ஆணைகள் வெளியிட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் திரையரங்குகளில் சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணமும், திரைப்படம் காண்போரின் வாகனங்கள் உள்வருதல், வெளியேறுதல், வாகனம் நிறுத்துதல் மற்றும் இயக்குதல் பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகளை திரையரங்க உரிமையாளர் செய்து கொள்ள வேண்டும்.

பார்வையாளர்கள் சிரமமின்றி உள்ளே வரவும், வெளியேறவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இருக்கைகள், திரையரங்க வளாகத்தினை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். திரையரங்குகளை சுகாதாரமாக பராமரிக்க போதுமான கால இடைவெளியுடன் பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிறப்பு காட்சி நடத்தப்பட வேண்டும்.

அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மற்றும் பார்கிங் கட்டணம் ஆகியவற்றினை கடைபிடிக்கவும், விதிமீறல்கள் இருப்பின் பொது மக்கள் வருவாய் கோட்ட அலுவலர், வேலூர்-9445000417, வருவாய் கோட்ட அலுவலர், குடியாத்தம் 9442999120, தாசில்தார்கள் வேலூர்- 9445000508, காட்பாடி 9445000510. குடியாத்தம்- 9445000509, பேர்ணாம்பட்டு- 9486064172 ஆகியோர்களுக்கு புகார் தெரிவிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது போல் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் புகார் எண்ணை அறிவித்துள்ளார்கள்.

 

Related post